கைலாயத்தில் ஈசன் தேவர்களுக்கு தரிசனம் தர அமர்ந்திருந்த சமயம் கார்த்திகேயன்(சுப்பிரமணியர்) வந்து,ஈசனுக்கு வணக்கம் தெரிவித்து தந்தையே! உலகத்தில் பல விதமான விரத முறைகள் இருந்தும் எளிமையானதும், எளிதில் விரத பலனை அளிக்க வல்லதுமான விரதம் எது என்று வினா எழுப்பினார். அதற்க்கு ஈசன் பல விரதங்கள் இருந்தாலும் விநாயக சதுர்த்தி விரதமே எல்லாவற்றிலும் முதன்மையானது. இதுவே விரும்பியதைக் கொடுக்க வல்லது என்றார். (அதனால் தான் எந்த பூஜையாக இருந்தாலும், ஹோமமாக இருந்தாலும் விநாயகரை பூஜித்தே ஆரம்பிக்கிறோம்).
முருகப்பெருமான்,ஈசன் சொன்னதைக் கேட்டு தங்கள் மகனை முழு முதற்கடவுள் என்று கூறுகிறீர்களே என்றார். அதற்க்கு புன்முறுவலுடன் ஈசன், மகனே! விநாயகர் தான் ஆதி பரம்பொருள். மும்மூர்த்திகளையும் படைத்தவர். அவர் பல சமயங்களில் பல அவதாரங்கள் எடுத்தவர். அதில் ஒன்று தான் என் மகனாக பிறந்தார்.ஆகா சதுர்த்தி விரதமே மேலானது என்றார். பார்வதி தேவி இவ்விரதம் இருந்தே ஈசனை மணந்தார்.
விநாயக சதுர்த்தி ஆவணி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தியில் வரும். சங்கட ஹர சதுர்த்தி பௌர்ணமிக்கு பிறகு வரும். விநாயக சதுர்த்தி அன்று மண்ணால் விநாயகரின் விக்ரகம் செய்து, அவரவர்களுக்கு சக்திக்கேற்ப அலங்காரம் செய்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும்.
விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல்,வன்னி இலை ,மந்தாரை இலை,தும்பைப்பூ, நந்தியாவட்டை, வில்வம், மாசி பத்திரம்,அகத்திபூ,மகிழம்பூ,நாகளிங்கபூ,நொச்சி இலை ஆகியவைக் கொண்டு பூஜிக்கலாம், எதுவும் இல்லை என்றால் அருகம்புல் போதுமானது.
அருகம்புல்லை வைத்துக் கொண்டு, இரண்டு இரண்டாக 21 தடவைகள் அர்ச்சிக்க வேண்டும்.